தேவர் குருபூஜை- கோட்டாட்சியர் வேண்டுகோள்
காரைக்குடி: தேவர் குருபூஜை விழாவுக்கு வாகனங்களில் ஊர்வலமாகச் செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் களப்பணியில் உள்ள வருவாய்த் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தரவேண்டும் என்று தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி குறித்து களப்பணியாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை கூறுகையில்,
வரும் 27, 28, 29, 30 தேதிகளில் மருபாண்டியர், பசும்பொன் தேவர் குருபூஜை விழாக்களுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் வாகனங்களில் செல்வார்கள்.
இம் மாதம் 30 -ம் தேதி வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் காவல்துறை, வருவாய்த்துறையினர் சட்டம், ஒழுங்கு பாதுகாப்புத்தர வேண்டியிருக்கிறது.
எனவே, இந்த வாக்காளர் சரிபார்ப்பு களப்பணியாளர்கள் தங்களது பணிகளுக்குச் செல்லும்போது, தேவர் குரு பூஜைக்காக செல்லும் வாகனங்களிலிருந்து ஏதேனும் பிரச்னைகள் அல்லது விபத்துகள் எதுவும் நேர்ந்தால் உடனடியாக அந்த ஏரியா கண்காணிப்பாளர், வட்டாட்சியர், ஆர்.டி.ஓ-விடம் தகவல் தரவேண்டும்.
குறிப்பாக காரைக்குடியிலிருந்து ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் வாகனங்கள் செல்லவேண்டும். அந்தப் பகுதியில் களப்பணியாளர் தகவல் தருவதை காலதாமதப்படுத்தாமல் உடனே சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.