திமுக என்றால் ஜெய்ராமுக்கு 'அலர்ஜி'- வீரமணி
சென்னை: திமுக ஆட்சியையே 'அலர்ஜி'யாகக் கருதும் ஜெய்ராம் ரமேஷின் உள்ளம் திமுக- காங்கிரஸ் கூட்டணி எப்படியாவது உடையாதா? என்று திட்டமிட்டு வேலை செய்வதாகத் தெரிகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாகும். கேரளத்தில் உள்ள அச்சுதானந்தன் அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தாங்கள் தனி அணை கட்ட வேண்டும் என்று அத்தனை அடாவடி முயற்சிகளையும் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதைத் தடுத்து நிறுத்திட முதல்வர் கருணாநிதி எடுக்கும் முயற்சிகளுக்கு கட்சி வேறுபாடு இன்றி எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு தந்து ஒரே குரலில் பேசாமல், வழக்கம் போல் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதில் 'அரசியல்' செய்கிறார்.
கேரளாவில் எல்லா அரசியல் கட்சிகளும் ஓர் அணியில் தமிழ்நாட்டுக்கு எதிரானதாக உள்ளது போல இங்கு நம்மிடையே ஒருமித்த கருத்தில்லை.
மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதில் இரட்டை வேடம் போட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணைக்கு ஆய்வு நடத்த கேரளாவுக்கு ரகசியமாக அனுமதியளித்துவிட்டு, பிறகு ஏதேதோ சொல்லியிருக்கிறார்.
திமுக ஆட்சியையே 'அலர்ஜி'யாகக் கருதும் அவரது உள்ளம் திமுக- காங்கிரஸ் கூட்டணி எப்படியாவது உடையாதா? என்று திட்டமிட்டு வேலை செய்வதாகத் தெரிகிறது.
இவரிடம் உள்ள இந்தத் துறையை மாற்றி யாராவது அனுபவம் மிகுந்த தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஒப்படைக்க பிரதமர் முன்வர வேண்டும். இவரது இந்த பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து திமுக கண்டன கூட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கூட்டணி என்றால் எதற்கும் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்பதில்லை. உரிமைக்கு குரல் கொடுப்பது தான் முக்கியம் இப்போது. இதேபோல், பல பிரச்சனைகளிலும் நாம் வாதாட போராட வேண்டியவைகள் உள்ளன. சேது சமுத்திரத் திட்டம்போல பல பணிகள் தமிழ்நாட்டு அரசுக்கும், கட்சிகளுக்கும் இருக்கின்றன என்று கூறியுள்ளார் வீரமணி.