பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல்!

சென்னை கொத்தவால்சாவடியைச் சேர்ந்த உஷா மோசஸ் (39) ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு (33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஸ்ரீராமுலு தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந் நிலையில் உஷா சமீபத்தில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,
எனக்கும் ஸ்ரீராமுலுவுக்கும் 2005ம் ஆண்டு கிருஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் அவர் வழக்கறிஞராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால், அவர் ஒரு போலி வக்கீல் என்பது தெரிய வந்தது. இது குறித்து நான் கேள்வி கேட்டதையடுத்து வீட்டுக்கு வருவதையே தவிர்த்துவிட்டார்.
மேலும் திருத்தணியை சேர்ந்த அவரது உறவுப் பெண் ஒருவரை 2வது திருமணம் செய்யவும் முயற்சி செய்தார்.
இது குறித்து போலீசில் நான் புகார் தந்ததால் அவரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீராமுலு, தான் ஒரு போலி வக்கீல் என்று ஒப்புக் கொண்டார். மேலும் 2வது திருமணம் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார்.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் தனது அக்காள் மகளான சரிதாவை இந்து முறைப்படி 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுபற்றி நான் கேட்டதற்கு என்னிடம் வரதட்சணை கேட்டும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் உஷா.
இது குறித்து விசாரித்த கொத்தவால்சாவடி போலீசார் ஸ்ரீராமுலுவை இன்று கைது செய்தனர்.
அவர் மீது திருமண மோசடி, பெண் வன் கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications