அதிமுக அலுவலகத்துக்கு ஜெ. திடீர் வருகை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று முன்னறிவிப்பின்றி திடீரென சென்றார்.
இதனால் வழக்கமாக அவரது வருகையையொட்டி நடப்படும் ஆயிரக்கணக்கான கொடிகள், கொட்டு மேள ஏற்பாடுகள் ஆகியவை இல்லை. மேலும் கட்சி அலுவலகத்தில் அவரை வரவேற்க குவிக்கப்படும் கூட்டமும் இல்லை.
இன்று காலை 11.45 மணிக்கு திடீரென ஜெயலலிதா அலுவலகத்துக்கு வந்தபோது அதிமுக நிர்வாகிகள் யாரும் அப்போது கட்சி அலுவலகத்தில் இல்லை. 18 அதிமுகவினர் மட்டுமே கட்சி அலுவலகத்தில் இருந்தனர்.
இந் நிலையில் ஜெயலலிதா கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கும் செய்தி தெரிந்ததும் அவைத் தலைவர் மதுசூதனன், கட்சி நிர்வாகிகள் டி.ஜெயக்குமார், வி.பி.கலைராஜன், சேகர்பாபு, ஆதிராஜாராம், கே.ஏ.கே.முகில், பாலகங்கா ஆகியோர் ஓடி வந்தனர்.
இதையடுத்து அங்கு காத்திருந்த கட்சி தொண்டர்களுடன் தனித்தனியே பேசிய ஜெயலலிதா, பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மக்களை ஏமாற்றும் புதுச்சேரி அரசு-ஜெ:
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் தவறான விவசாயக் கொள்கை காரணமாக, விவசாய உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து விட்டன.
இது மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதும், கடத்தப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன என்றும், பதுக்கல்காரர்களும், கடத்தல்காரர்களும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலைவாசி உயர்விற்குக் காரணமாக இருக்கின்றனர் என்றும்,
'ஆன்லைன்" வர்த்தகம் என்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது போதாதென்று, புதுச்சேரி மாநில அரசு தனது பங்கிற்கு பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசு உயர்த்தி மக்களின் மீது கூடுதல் சுமையை திணித்துள்ளது.
வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய், உளுந்து உள்ளிட்ட ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாய விலைக்கடைகளின் மூலம் வழங்கப்படும் என்று புதுச்சேரி மாநில சட்ட மன்றத்தில் காங்கிரஸ் அரசு அறிவித்து ஓர் ஆண்டு ஆகியும், இதுவரை எந்தப் பொருளும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல்!.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, பாலின் விலையை ஏற்றி மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்தியுள்ள, அறிவித்தபடி மானிய விலையில் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்காத புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசைக்கண்டித்தும், விலைவாசியை கட்டுப் படுத்தவும், உயர்த்தப்பட்ட பாலின் விலையை குறைக்கவும், அறிவித்தபடி மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் வலியுறுத்தி,
அதிமுக புதுச்சேரி மாநிலக் கழகத்தின் சார்பில் 26ம் தேதி புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன் தலைமையிலும், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.