வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை - ராமதாஸ்
செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தாம் 1972 ஆம் ஆண்டு முதலே பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், 107 ஜாதிகளை பட்டியலிட்டு ஒட்டு மொத்தமாக 20 சதவீதம் மட்டுமே.
இது பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு போதுமானதாக இல்லை. தமிழகம் முழுவதும் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை உடனடியாக நடத்தி அதனடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
சட்டநாதன் கமிஷன் கூறிய இடஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது போன்று மற்ற ஜாதியினருக்கும் அவர்களின் சதவீதத்திற்கு ஏற்றாற் போல் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க முடியும். ஏனென்றால் அவரை 5 முறை முதல்வராக்கிய பெருமையில் பெரும் பங்கு வன்னியர்களுக்கு உண்டு என்றார் ராமதாஸ்.