செம்மொழி மாநாடு மார் தட்டும் மாநாடாக அமையட்டும் - சரத்
சென்னை: ஒவ்வொரு தமிழனும் மார்தட்டும் மாநாடாக உலக தமிழ் செம்மொழி மாநாடு அமைந்திட வேண்டும். உலக தமிழ் செம்மொழி மாநாடு தமிழர்களின் உலக திருவிழா. அந்த திருவிழா வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கை:
இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டது இன்னும் நம் கண்களில் நீரை வரவழைத்து கொண்டிருக்கின்றன. நடந்தவை, முடிந்தவை. நடக்கப் போவது நாம் எதிர்கொள்ள வேண்டியவை. இன்று அங்குள்ள பிரச்சனை முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் அவரவர் வாழ்விடங்களுக்கு செல்ல வேண்டும்.
இதுவரை 43 ஆயிரம் பேர் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது. முகாமில் இருக்கும் மக்கள் முழுமையாக அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கபட வேண்டும்.
தமிழர்களின் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசு வழங்கும் நிதி 100 சதவீதம் தமிழன் நிம்மதியாக வாழ்வதற்கு பயன்படுத்தபட வேண்டும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் துயரத் திற்கு மாற்றம் வேண்டும். வேதனையால் தவிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் மருந்திடக்கூடிய வாய்ப்பு உருவாக வேண்டும். அத்தகைய வாய்ப்பை முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாடு உருவாக்கிட வேண்டும்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் தமிழனுக்கு ஆபத்து என்றால் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்ற நிரந்தர அமைப்பு வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு காண்கிற மாநாடாக அமைய வேண்டும்.
அனைத்து துறைகளிலும் தமிழன் புகழ் ஓங்கி உயர்ந்திட வேண்டும் உயர் கல்விகளில் தமிழை முதன்மை பாடங்களாக எடுத்து பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு களில்முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும். தனி இட ஒதுக்கீடு வேண்டும்.
கிராமந்தோறும் தமிழ் வளர்ச்சி குழுக்களை அரசியல் வேறு பாடின்றி உருவாக்கிட வேண்டும். தமிழ் வளர்ச்சி துறைக்கென தனி அமைச்சகத்தையும், அமைச்சரையும் உருவாக்கிட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.