செம்மொழி மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பு - இலங்கை தமிழ் அமைச்சர்
சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழக அரசு எங்களுக்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வோம் என்று இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறியுள்ளார்.
ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் முத்துசிவலிங்கம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிற்கு நான் சுற்றுலா பயணமாக வந்து ஊட்டியில் எனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்பொழுது சில நாளிதழ்களின் செய்தியாளர்கள் என்னை சந்தித்து கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களுக்கு பேட்டி அளித்தேன்.
அப்போது இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகமாக உள்ளதாக கேட்டதற்கு, அண்டை நாடுகளின் உறவுகள் நன்றாக உள்ளது. இதில் இந்தியாவின் ஆதரவு அதிக அளவு இருக்கின்றது என்றேன்.
உலக தமிழ் செம்மொழி மாநாடு பற்றியும் கேட்டனர். இது சம்மந்தமாக எனது சொந்த கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ் மொழிக்கு விழா எடுக்கின்ற போதோ, தமிழ் வளர்ச்சிக்கு மாநாடு நடைபெறுகின்ற போதோ இலங்கையில் வாழும் இந்திய வம்சா வழியினருக்கும், இந்திய தொழிலாளர் காங்கிரசுக்கும் அழைப்பு விடுத்தால் கட்டாயமாக கலந்து கொள்வோம்.
அதுவும் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்கு அர்ப்பணித்து கொண்டிருக்கும் பெரியவர் முதல்வர் கருணாநிதி விழா எடுப்பது பெருமைக்குரியது, வரவேற்கத்தக்கது.
தமிழை செம்மொழியாக்கிய முயற்சியை பாராட்டுவதோடு இந்த மாநாட்டிற்கு முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சிவலிங்கம்.












Click it and Unblock the Notifications