சென்செக்ஸில் 410 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள்.
கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
இந்நிலையில் இந்த வாரமும் வீழ்ச்சியுடன்தான் வர்த்தகம் துவங்கியது. நேற்று 70 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இன்று காலை முதலே வீழ்ச்சி கண்டு வந்தது.
பணவீக்கம் வரும் நாட்களில் 6 சதவிகிதம் வரை உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்த வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையிலும் 102 புள்ளிகள் சரிந்தது.
அதிகபட்சமாக டிஎல்எப் பங்குகள் 5.3 சதவிகிதம் விலைச் சரிவு கண்டன. ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாடா பவர், எஸ்பீஐ பங்குகள் கணிசமான நஷ்டம் கண்டன.
டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற சில பங்குகள் மட்டும் சொற்ப லாபத்தில் கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் குறைந்து 16353.40 ஆகவும், நிப்டி 124 புள்ளிகள் குறைந்து 4846.70 ஆகவும் இருந்தது.