உண்மை பேசும் ஒரே ஒரு எம்பி!-தா.பாண்டின்
மதுரை: உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முதலில் கேரள அரசு மதிக்கட்டும். உச்சநீதிமன்றம் கூறியபடி 142 அடி நீரை அணையில் தேக்கிக் காட்ட வேண்டும். பிறகு தனது கவலைகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை முதலில் கேரள அரசு மதிக்க வேண்டும். வெறும் வாயளவில் மட்டும் நின்று விடக் கூடாது. அணையில் 142 அடி நீரைத் தேக்கிக் காட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும். முதலில் அதை செய்துவிட்டு பின்னர் தனது கவலைகள், அச்சங்கள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அது முயலலாம்.
ஏன் கேட்கவில்லை திமுக?:
புதிய அணைக்கு ஆய்வு நடத்துவதை கண்டித்து மதுரையில் 1ம் தேதி கூட்டம் நடத்தப்போவதாக முதல்வர் கூறி உள்ளார். இந்தப்பிரச்சினையை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்காதது ஏன்? அப்படி கேள்வி கேட்டு அதையும் மீறி ஆய்வுக்கு அனுமதித்திருந்தால் அமைச்சரவையில் திமுக இடம் பெறுவது ஏன்?.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தவறிவிட்டன. அதை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரிகட்சிகள் சார்பில் அடுத்த மாதம் 17ம் தேதி மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும்.
பொய் பேசுகிறார்கள்...
இலங்கை சித்ரவதை கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதாக சொல்வது பொய் பிரசாரம் ஆகும். ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குத்தான் தமிழர்கள் அனுப்பப்படுகிறார்கள். அதை எதிர்க்கும் இளைஞர்களை கொன்று விடுகிறார்கள். அது வெளியே தெரியக்கூடாது என்பதால் அங்கு பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை.
ராஜபக்சேவை கண்டித்து கண்டித்து திமுக போராட்டம் அறிவித்தால் நாங்களும் இணைந்து போராட தயாராக இருக்கிறோம்.
இலங்கை முகாம்களை பார்வையிட சென்ற எம்பி குழுவில் பலர் உண்மையான தகவலை வெளியிடவில்லை. மாறாக பொய் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரே ஒரு எம்.பி மட்டும் (திருமாவளவன்) அங்கு நடந்து வரும் உண்மையை பேசி வருகிறார்.
ராஜபக்ஷேவை கொலைக் குற்றவாளியாக்கி, நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை திமுக வலியுறுத்தினால், முதல்வருடன் இணைந்திருக்கும் முதல்கட்சியாக நாங்கள் இருப்போம். அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு தான் வைத்திருந்தோம். கூட்டணி அல்ல.
உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் மொழி ஆட்சி குழு தான் நடத்தும். ஆனால் செம்மொழி மாநாடு என நடத்தப்படுவது, தமிழக அரசு தானே எடுக்கும் விழா என்றார் தா.பாண்டியன்.
பிரியாணிக்காக ஏமாறும் தமிழன்:
இந் நிலையில் தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த முல்லைப் பெரியாறு அணை மீட்பு சிறப்பு பொது மாநாட்டில் பேசிய அவர்,
ஆளுங்கட்சியினர் என்னதான் கொள்ளையடித்தாலும் ஓட்டுக்கு முந்தைய நாள் பிரியாணி போட்டு வெற்றி பெறுவோம் என கூறுகின்றனர்.
முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் போராடவில்லை. மதுரையில் வந்து கூட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பது வேடிக்கை.
கேரளாவில் பிரபுக்கள் ஆட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக நீங்கள் இருக்க வேண்டும். தண்ணீருக்காகவும், நிலத்துக்காகவும் நில பிரபுக்கள்தான் போராடுவர். நீங்கள் அப்படி இருக்க வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications