சுடுகாடு அமைதியாகத்தானே இருக்கும்-சீமான்
புதுக்கோட்டை: இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.
தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில் நேற்று பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
அவர் கூறுகையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது பாவாணன் உலவிய மண். இந்த மண்ணில் நான் பேசுவதை பெருமையாக நினக்கிறேன்.
சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும்.
ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள் ஒரு தமிழச்சி. நான் அவளிடம், கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ஆண்ட பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப் பேசுவது தேசப் பிழையா?. அமெரிக்காவில் கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில் புலிக் கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.
இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான். ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய். நீ எங்களைப் பார்த்து மிரட்டுகிறாய்.
அண்ணன் ப.சிதம்பரம் சொல்கிறார்...10 மாதத்தில் இலங்கை கடற்படையினரால் ஒரு தமிழக மீனவர் தாக்கப்படவில்லையென்று. இனிமேல் தாக்குபவர்கள் தயவு செய்து ப.சிதம்பரம் முன்பு தாக்குங்கள். அப்போதுதான் அவருக்கு தெரியும்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்கிறார். அது என் பாட்டன் சொத்து. இதை சிங்களவனுக்கு கொடுக்க நீ யார்?.
முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இங்கே ஆளாளுக்கு கதை விடுகிறார்கள். உறவினர்கள் இருப்பவர்ளை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை மட்டும் உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தமிழர்களை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பவில்லை. அதிலும், முகாம்களிலுருந்து அனுப்பப்பட்டவர்களில் பலரை வேறு இடங்களில் வைத்துக் கைது செய்து எங்கோ கொண்டு சென்று விடுகின்றனர்.
பொதுவாக தமிழர்களை வறண்ட பூமியில் தான் குடியமர்த்துகின்றனர். சிங்களர்களை வளமான பூமியில் குடியமர்த்துகின்றனர். இது என்ன கொடுமை. எம் மக்களுக்கு வறண்ட பூமி. சிங்களவர்களுக்கு வளமான பூமியா?.
அதிகம் நெல் விளைந்த பூமி கிளிநொச்சி. அங்கே எம் மக்களை இன்னும் குடியமர்த்தவில்லை. கண்ணிவெடி அகற்றுகிறோம் என்கிற பெயரில் நாடகமாடுகிறார்கள். கிளிநொச்சியில் கண்ணி வெடி என்பதே இல்லை. இருந்தால்தானே அகற்றுவதற்கு....
அரசியல் இயக்கமாக மாற்றும் நோக்கில்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம்.
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். 2014ல் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இயக்கத்தை பலப்படுத்துவதே முதல் நோக்கம். அது சட்டமன்ற தேர்தலுக்குள் முடியாது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று காங்கிரசை தோல்வியடையச் செய்ய வேண்டும். இரண்டாவது, தமிழனை தனித்துப் பிரிக்க வேண்டும். இதனால்தான் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இந்த தேர்தலின் மூலம் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.
காமராஜர்தான் உண்மையான காங்கிஸ்காரர். அவர் காலத்தில் நாங்கள் வளர்ந்தோம். காமராஜரை பார்க்காத இப்போதிருக்கும் காங்கிரஸகாரர்கள் காமாராஜரா?அது யார் என்று கேட்கிறார்கள்.
காமராஜரோடு காங்கிரஸ் அழிந்துவிட்டது. காங்கிரஸ் மீண்டும் வர வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் காமராஜர் ஆனால்தான் உண்டு. ஆனால் இது நடப்பது சாத்தியமில்லை.
காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜர் பெயரைக்கூட சொல்ல தகுயில்லை. ஒரு முறை தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கையில் ஒரு குழுந்தை ஆற்றில் விழுந்திருக்கிறது. உடனே காமராஜர் தேசியை கீதத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு குழந்தையைக் காப்பாற்றினார்.
உயிருக்கு பிறகு தான் தேசியகீதம் என்கிறார். ஆனால், இலங்கையில் எத்தனை உறவுகள் மடிகின்றன. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதி. இன்று ஒரு இனமே அரை வயிறு சோற்றுக்காக கையேந்தி நிற்கிறதே. என்ன கொடுமை.
இலங்கை சென்று வந்த எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. அழகிரி, "இலங்கையில் அமைதி நிலவுகிறது. தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆமாம், அமைதியாகத்தான் இருக்கிறார்கள். சுடுகாடு எப்போதும் அமைதியாகத்தானே இருக்கும் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications