சோமாலிய கடற்கொள்ளையர் பிடியில் தூத்துக்குடி வாலிபர்- கண்ணீரில் குடும்பம்
தூத்துக்குடி: சோமாலிய கடல் கொள்ளையர்கள் பிடியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழர் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரியுள்ளனர்.
தூத்துக்குடி தட்டார் தெருவை சேர்ந்த வீரமேகன் மகன் விஜய்கணேஷ். இவர் மும்பையில் உள்ள எஸ்என்பி என்ற கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான அல்ஹாலிக் என்ற ஆயில் டேங்கர் கப்பலில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்த கப்பலில் 24 இநதியர்கள் உள்பட 26 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் கணேஷிம் கடலூரை சேர்ந்த ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு இக்கப்பல் தெற்கு ரஷ்யாவிலுள்ள நோவ்ரோஸ்லிக் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு கென்யாவிலுள்ள மாம்பூசா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
கடந்த 21ம் தேதியன்று அதிகாலையில் கப்பல் செஷசெல்ஸ தீவு பகுதியிலிருந்து 180 கடல் மைல்கள் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சோமாலிய கடற் கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்து அதில் இருந்த 26 பேருடன் கடத்தி சென்றனர். அவர்களில் 24 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் கணேஷ் உள்ளிட்ட தமிழர்கள் இருவரும் அடக்கம்.
இதுகுறித்த தகவல் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனம் 22 ம் தேதி மாலை விஜய் கணேஷின் வீ்ட்டுக்கு தெரிவித்துள்ளது.
இதனால் கலக்கமடைந்த அவரது தந்தை வீரமோகன், தாய் சாந்தி மஸ்கரனாஸ், அண்ணன் விஜய் சின்னசாமி, தங்கை வைதேகி மற்றும் மற்றும் உறவினர்கள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கலெக்டர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து விஜயை மீட்டு தரவேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விஜயகணேசின் தந்தை வீரமோகன் கூறுகையில்,
எனது மகன் கடந்த பிப்ரவரி மாதம் கப்பலுக்கு வேலைக்கு சென்றான். கடந்த 22-ந் தேதி கப்பல் கம்பெனியில் இருந்து டெலிபோனில் பேசினார்கள். அப்போது கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்று இருப்பதாகவும், கப்பல் நேற்று சோமாலியாவுக்கு சென்று இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கப்பலில் உள்ள மாலுமிகள் பத்திரமாக உள்ளனர் என்றும், கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
எனது மகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆகையால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளையர்கள் பிடியில் உள்ள எனது மகனையும், மற்ற மாலுமிகளையும் மீட்க வேண்டும் என்றார்.
இந்திய போர் கப்பல்கள் விரைவு:
இந் நிலையில் சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தவும், அவர்களிடம் சிக்கியுள்ள கப்பல்களில் உள்ள இந்தியர்களை மீட்கவும் இரு போர் கப்பல்களை இந்திய கடற்படை அனுப்பியுள்ளது.
ஐஎன்எஸ் தாபர், ஐஎன்எஸ் ஷர்துல் ஆகிய இரு கப்பல்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications