கிரிமினல் வழக்குகளை சுமந்து நிற்கும் 143 மகாராஷ்டிர எம்.எல்.ஏக்கள்
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் 143 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
கசங்கிய சட்டை, கால் கடுக்க மக்களுக்காக அலைவது, நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்காக உழைப்பது, மக்களுக்காக சொத்துக்களைக் கூட இழக்கத் தயாராக இருப்பது. இவைதான் அந்தக் காலத்து அரசியல்வாதிகளின் அடையாளம்.
ஆனால் இன்று அப்படியே தலைகீழ். போகும்போதும் வரும்போதும் முன்னும், பின்னும் ஏகப்பட்ட கார்கள், ஆள் பலம், பண பலம், கிரிமினல் செயல்களில் நல்ல அனுபவம். இவைதான் இன்றைய அரசியல்வாதிகளின் முக்கியத் தகுதியாக மாறி விட்டது.
அனைத்து மாநில சட்டசபைகளிலும் போய் பார்த்தால் கிரிமினல் வழக்குகளே இல்லாத எம்.எல்.ஏ இல்லை என்று கூறும் அளவுக்குத்தான் இன்றைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 3 மாநில சட்டசபைத் தேர்தலில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் கிரிமினல் வழக்குகளை தாங்கி நிற்கும் வேட்பாளர்கள் எம்.எல்.ஏக்கள் ஆகியுள்ளனர்.
அடுத்த இடத்தை ஹரியாணாவும், 3வது இடத்தை அருணாச்சல் பிரதேசமும் பெறுகின்றன.
தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏக்களில் 143 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
இவர்களில் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அதாவது 31 பேர் சிவசேனா கட்சியினர். பாஜக, காங்கிரஸ் தலா 26 பேர். தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் 24 பேர்.
36 பேர் சுயேச்சைகள் அல்லது வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணாவில், 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 6 பேர் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தளத்தைச் சேர்ந்தவர்கள். ஐந்து பேர் காங்கிரஸார்.