முல்லை பெரியாறு அணையிலும் கேரளா சர்வே!
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை கேரள அரசு தொடர்ந்து மும்முரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியைத் தவிர்த்து தற்போதைய அணையிலும் அது ஆய்வு நடத்தி வருகிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புண்ணியத்தால், புதிய அணைக்கான ஆய்வு நடத்துவதற்குத் தேவையான அனுமதியை வாங்கி விட்ட கேரள அரசு அதை தற்போது மும்முரமாக மேற்கொண்டுள்ளது.
இந்த சர்வேக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதால் சர்வே பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளது கேரள அரசு.
கேரள நீர்ப் பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில் 40 பேர் கொண்ட குழு கடந்த 19-ம் தேதி முதல் வனப் பகுதியில் சர்வே பணியைத் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடத்தி வருகிறது.
மத்திய வனத் துறையின் வனப் பகுதியில் 2.5 ஹெக்டேர் பரப்பில் சர்வே நடத்தவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள ஆய்வுக் குழுவினர் தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரியாறு அணைப் பகுதியிலும் தொடர்ந்து சர்வே செய்து வருகின்றனர்.
ஆய்வு தொடர்பான செய்திகளை கேரள மீடியாவுக்கு மட்டும் அளித்து வருகிறது அந்த மாநில அரசு.
தமிழகப் பகுதியில் சர்வே செய்வதை தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும் என்று 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ், முல்லைப் பெரியாறு அணை தமிழக உரிமை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.பி. முத்தையா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜேஷ் கூறுகையில்,
கேரள ஆய்வுக் குழுவினர் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. இது தவறுதான். 40 பேர் சர்வே பணியை மேற்கொள்ளும்போது என்ன செய்ய முடியும். இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ளோம் என்றார்.
இதுவும் உண்மைதான். கேரளக் குழுவினர் தமிழக அதிகாரிகளை சற்றும் மதிப்பதில்லை. பெரும் கும்பலாக அவர்கள் வந்து அடாவடியாக சர்வே செய்யும்போது, மிகச் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் தமிழக அதிகாரிகள் நிச்சயம் எதுவும் செய்ய முடியாது. தமிழக அரசு சுதாரிப்பாக இருந்து ஆரம்பத்திலேயே கேரள அரசின் அடாவடிகளை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications