ரூ. 13 லட்சம் வைர நகை திருடப்பட்டதாக பொய்ப் புகார் - வாலிபர் கைது
சென்னை: பைக்கில் சென்றபோது தான் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக பொய்யான புகாரைக் கொடடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நகைகள் அடங்கிய பையை அவர் தொலைத்து விட்டு, அதிலிருந்து தப்புவதற்காக கொள்ளையடிக்கப்பட்டதாக அந்த நபர் பொய்யான புகாரைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு நகை செய்யும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருப்பவர் நிலேஷ் சுரானா.
அந்த நிறுவனத்தில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கத்திட்ரல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். மோட்டார் சைக்களில் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தன்னுடைய மோட்டார் சைக்களில் வந்திருந்த தங்க, வைர நகை பையை பறித்து சென்று விட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
எழும்பூர் போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதனிடையே டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றும் சுப்பிரமணி என்பவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒரு பையை நேற்று ஒப்படைத்தார். அதில் தங்க, வைர நகைகள் இருந்தன.
எழும்பூரில் ஒரு சிக்னில் நின்று கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்களில் இருந்து அந்த பை விழுந்து விட்டது என்றும் அதை அந்த மோட்டார் சைக்கிளில் சென்று நபர் கவனிக்கவில்லை என்றும் அந்த டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். அந்த பையை எடுத்துக்கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த போது அவரை காணவில்லை.
பயணிகளை கிஸ்கிந்தாவுக்கு அழைத்து சென்று கொண்டிரு்நத நான், அதை முடித்து விட்டு திரும்பி வந்து பையை திறந்து பார்த்தேன். அதில் தங்க, வைர நகைகள் இருந்தது. எனவே ஒப்படைக்க வந்தேன் என்று அந்த டிரைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூரில் தங்க,வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக வந்த புகார் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த நகை பை எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நிலேஷ் சுரானாவை அழைத்து காண்பித்த போது அந்த நகைகள் தான் காணாமல் போனவை என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து நகைகளை தவற விட்டுவிட்டு கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்த நிலேஷ் சுரானாவை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications