நக்ஸல்கள் மிரட்டல்-ப.சி சென்னை வீட்டுக்கு பாதுகாப்பு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளின் மிரட்டல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நக்ஸல்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத் துறை பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் சென்னை வீட்டில் அவ்வளவு பாதுகாப்பு இல்லை.
இந் நிலையில் நுங்கம்பாக்கம் பை கிராஸ் கார்டனில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அவருக்கு 2 மத்திய படை வீரர்கள்கள் தவிர மாநில காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டை சுற்றிலும் சதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.