'குடும்பத்தோடு வந்துட்டீங்களா..' - எலிசபெத்தின் கணவர் பிலிப் கிண்டல் - இந்தியர்கள் அதிருப்தி!

லூசுத்தனமாக பேசுவதில் பெயர் போனவர் பிலிப். எதையாவது சர்ச்சையாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்வார். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் அவருக்கு ராணி எலிசபெத் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் 400க்கும் மேற்பட்ட இந்தியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் படேல் என்ற பெயருடையவர்கள் பெருமளவில் இருந்தனர். விருந்துக்கு வந்த எலிசபெத்தின் கணவர் பிலிப், அங்கு நின்றிருந்த இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியத் தொழிலதிபர் அதுல் படேலிடம் கை குலுக்கியபடியே, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை படேல்களும் மொத்தமாக வந்து விட்டார்கள் போல என்று ஜோக்கடித்துள்ளார்.
அதாவது படேல் என்ற பெயருடையவர்கள் எல்லோரும் சொந்தக்காரர்கள் என்று குருட்டாம் போக்கில் நினைத்து விட்டார் பிலிப். ஆனால் படேல் என்பது குஜராத்திகளின் குடும்பப் பெயர். இந்தத் துணைப் பெயரைக் கொண்டவர்கள் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர்.
இதுகுறித்து அதுல் படேலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இளவரசர் பிலிப்பின் கருத்தை பெரிய விஷயமாக அதுல் பேடல் எடுத்துக் கொள்ளவில்லை. நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொண்டார் என்றார்.
ஆனால், ரிபப்ளிக் என்ற அமைப்பு இதை கண்டித்துள்ளது. இங்கிலாந்தில் அரச வம்ச முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் அமைப்பு இது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிரகாம் ஸ்மித் கூறுகையில், படேல் என்ற பெயரை கிண்டலடிப்பது போல இளவரசர் பிலிப் கூறியது அந்த சமுதாயத்தினரை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியக் குடியரசுத் தலைவருடன் வந்துள்ள, படேல், பாட்டீல் என்ற பெயருடையவர்களையும் வேதனைப்படுத்தியுள்ளது.
இளவரசர் பிலிப்பின் பேச்சு தேவையில்லாத நேரத்தில் உதிர்க்கப்பட்ட தேவையற்ற கருத்தாகும் என்றார்.
88 வயதாகும் பிலிப் இதுபோல சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசுவது இது முதல் முறையல்ல. 2002ம் ஆண்டு எலிசபெத்துடன் ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கு பழங்குடியினத்தவர்களை சந்தித்தார் பிலிப். அப்போது அவர்களிடம், இன்னும் ஈட்டி எறிஞ்சிக்கிட்டுதான் இருக்கீங்களா என்று நக்கலாக கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இப்படி பலமுறை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட பிலிப் இந்த முறை இந்திய சமுதாயத்தினரை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications