20 கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு 'கடத்தல்'
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பாவை பதவி நீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி அளித்து வரும் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்,
அதிருப்தி கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் சுற்றுலாத்துறை அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
இதையடுத்து ரெட்டி சகோதரர்களான அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோரை பேச்சு நடத்த பாஜக மேலிடத் தலைவர் அருண் ஜேட்லி அழைத்தார். ஆனால், கருணாகர ரெட்டி மட்டுமே ஜேட்லியை சந்திக்க வந்தார்.
அப்போது எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் எதியூரப்பாவுக்கு ஆதரவான ஆர்எஸ்எஸ் தலைவர்களும் ரெட்டியை சந்தித்தனர். அவர்களிடமும் தனது நிலையை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.
இந் நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரை பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் அழைத்துச் சென்ற ரெட்டி சகோதரர்கள் அவர்களை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து:
இதற்கிடையே, ஜேட்லி முன் தனது பலத்தை நிரூபித்து காட்டுவதற்காக முதல்வர் எதியூரப்பா நேற்று காலை பெங்களூரில் தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்ட இருந்தார். ஆனால், அவரை அருண் ஜேட்லி தடுத்ததால் அதை ரத்து செய்து விட்டார்.
சபாநாயகருடன் சந்திப்பு:
இந் நிலையில், ரெட்டி சகோதரர்களால் அடுத்த முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டுள்ள கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மாநில பாஜக சதானந்த கெளடா சந்தித்துப் பேசினார்.
மேலும் ஜெகதீஷ் ஷெட்டரை மடாதிபதி ஒருவரும் சந்தித்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
எம்எல்ஏக்களுக்கு எதியூரப்பா அழைப்பு:
இதற்கிடையே தனது ஆதரவு எம்எல்ஏக்களை பெங்களூரிலேயே தங்கியிருக்கும்படியும் அழைக்கும்போது தனது வீட்டுக்கு வருமாறும் முதல்வர் எதியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக மேலிடத் தலைவர் அருண் ஜேட்லி, தொடர்ந்து முதல்வருடனும் அக்கட்சித் தலைவர்களுடனும் அடுத்தடுத்து பேச்சு நடத்த பெங்களூரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளார்.
மேலும் போபாலில் முகாமிட்டிருந்த பாஜக தேசிய பொதுச் செயலாளரும், பெங்களூர் தெற்கு எம்பியுமான அனந்தகுமார் நேற்றிரவு பெங்களூர் திரும்பினார். அவருடனும் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். இவருக்கும் எதியூரப்பாவுக்கும் ஆகாது என்பது தனிக் கதை. ஆனால், ஆர்எஸ்எஸ் ஆதரவு இருப்பதால் அனந்த்குமாரை எதியூர்பபாவால் ஏதும் செய்ய முடியவில்லை.
என்னை பணிய வைக்க முடியாது-எதியூரப்பா...
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் எதியூரப்பா, மக்களிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கை சிலரால் பொறுத்தக் கொள்ள முடியவில்லை. அவர்களால் என்னை பணிய வைக்க முடியாது.
சில அமைச்சர்கள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதை நான் பொருட்படுத்தவில்லை என்றாலும் அவர்களை தொடர்ந்து இப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமையிடம் கூறியுள்ளேன் என்றார்.
இதற்கிடையே ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய நண்பரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ஸ்ரீராமுலு, காடக் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையி்ல், அமைச்சராக நான் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம் இதுவாக இருக்கும் என்றார்.
டெல்லிக்கு அழைப்பு:
இந் நிலையில் ரெட்டி சகோதரர்களை பாஜக தலைமை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளது. அங்கு வைத்து அவர்களுடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சி்ங், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேசுவர் என்று தெரிகிறது.