கணவர் மறைவு-கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிய பெண்
திருவண்ணாமலை: கணவர் இறந்த தகவலை வீட்டில் தெரிவிக்காமல் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மெதுவாகத் தெரிவித்ததைக் கேட்டதும் அவரது மனைவி மயக்கமடைந்து விழுந்தார்.
திருவண்ணாமலை - ஆரணி தாலுகா அம்மாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கலைவாணி. இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிளஸ் 2 வரை படித்த பழனிவேல், கார் டிரைவாக வேலை செய்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டில் டிரைவர் வேலைக்கு சென்றார். இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிந்து, அடுத்த மாதம 10ம் தேதி சொந்த ஊருக்கு வருவதாக மனைவியிடம் தெரிவித்திருந்தார். அவரது வருகைக்காக மனைவி கலைவாணியும், குழந்தைகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் துபாயில் ஏற்பட்ட விபத்தில் பழனிவேல் இறந்து விட்டதாக, அவருடன் வேலைச் செய்யும் தூத்துக்குடியைச் சேர்ந்த தென்னரசு என்பவர், கடந்த 26ம் தேதி பழனிவேல் குடும்பத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைவாணிக்கு, கணவர் இறந்ததை தெரிவித்தால் மேலும் உடல்நிலை பாதிக்கும் என கருதி, இறந்த தகவலை மறைத்துவிட்டனர்.
கணவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக இங்கு அழைத்து வர, கலெக்டரிடம் மனு அளிக்கலாம் என சொல்லி கலைவாணியை திருவண்ணாமலை அழைத்து வந்தனர்.
கலெக்டர் அறைக்கு வெளியில் காத்திருந்தபோதுதான், கணவர் இறந்த தகவலை மெல்ல கலைவாணியிடம் தெரிவித்தனர். கணவரது உடலை மீட்டுத்தர கலெக்டரிடம் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என கூறி பத்திரத்தில் கையெழுத்து கேட்டனர்.
இந்த திடீர் தகவலை கேட்ட அதிர்ச்சியில் கலைவாணி மயங்கி விழுந்தார். அதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துபாய் நாட்டில் உள்ள ஜெடாக் எனும் இடத்தில் உள்ள பழனிவேலின் உடலை, இந்திய தூதரகம் மூலம் தமிழகம் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ராஜேந்திரன் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications