தமிழர்கள் சித்திரவதை-ஐரோப்பிய யூனியன் கண்டனம்
லண்டன்: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வீணாக பேசுவதை இலங்கை விட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின், தெற்காசிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் பிரிவு தலைவர் ஜீன் லம்பார்ட் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், தமிழர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம், சமீபத்தில் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளது.
பத்திரிகைகள் மீதான அடக்குமுறைக்கும் இத் தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வது சர்வதேச சட்ட மீறலாகும்.
முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்ப உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜீன் லம்பார்ட் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். மாறாக வெற்றுப் பேச்சைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜீன் வலியுறுத்தியுள்ளார்.