புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி!
புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்துக் கொண்ட கேபியை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது இலங்கை போலீஸ்.
இதில் உளவுத்துறையினருக்கு தேவையான தகவல்கள் கிடைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் 57 பேர் உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பதை சிங்கள அதிகாரிகளிடம் பத்மநாதன் கூறி உள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் திவயின என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அரவிகன் தற்போதும் முழு செயல்பாட்டில் இருப்பதாக பத்மநாதன் கூறி உள்ளதாக தெரிகிறது. இது தவிர எந்தெந்த நாடுகளில் புலித் தலைவர்கள் யார்-யார் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இவர்களது பெயர்கள் இதுவரை எதிலும் வெளியானது இல்லை. தற்போது தான் இந்த பட்டியலை முதன் முதலாக சிங்கள அரசு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் புலிகளின் மொத்த நெட்வொர்க்கையுமே கேபி, சொல்லிவிட்டதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை இப்போதைக்கு அமைதியாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.