கிரெடிட் கார்ட் மோசடி-3 மலேசிய பெண்களுக்கு இன்டர்போல் வலை
சென்னை: தென்னிந்தியாவில் நடந்து வரும் மிகப் பெரிய கிரெடிட் கார்டு மோசடித் திட்டத்தில் தொடர்புடைய 3 மலேசிய பெண்களைப் பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் டீன் ஏஜ் சிறுமிகள் என்பது மிக முக்கியமானது. சென்னையில் இந்த மூன்று சிறுமிகளும் அழகுக் கலை தொடர்பான படிப்பை படித்து வந்தனர். படிப்பை முடித்து விட்டு மலேசியா திரும்பி விட்டனர்.
இவர்களுக்கும் ஒரு இலங்கைத் தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் நால்வரும் இணைந்து போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும், சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த மூன்று மலேசிய பெண்களும், விலை உயர்ந்த பொருட்களை வாங்க போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் குறைந்தது ரூ. 5000 வரை இவர்கள் பொருட்கள் வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் கனடா குடியுரிமை பெற்ற அந்த இலங்கைத் தமிழரை சென்னை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான மலேசிய பெண்களின் தொடர்பு குறித்து தெரிய வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு மலேசியா திரும்பி விட்ட இந்த மூன்று பேரையும் பிடிக்க தற்போது இன்டர்போல் உதவியை சென்னை போலீஸ் நாடியுள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில், ரூ. 50 லட்சம் வரையிலான நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை இந்த மூன்று பெண்களும் வாங்கியுள்ளனர்.
போலி கிரெடிட் கார்டு மோசடியில், மூன்று பெண்களுக்கும் உறுதியான தொடர்புகள் உள்ளன. அவர்களது உண்மையான பெயர், முகவரி, கல்லூரி பெயர் ஆகியவற்றை அறிய முயன்று வருகிறோம்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் அவற்றை இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தி மூன்று பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
எப்படி தயாராகிறது போலி கிரெடிட் கார்டு..?
மலேசியாவில் உள்ள வங்கிகளின் காலி கிரெடிட் கார்டுகளை கூரியர் மூலம் அந்த இலங்கைத் தமிழர் சென்னைக்கு வரவழைக்கிறார். அதன் பின்னர் காலி கார்டுகளில் போரூரில் உள்ள தனது வாடகை வீட்டின் முகவரியை இடம் பெறச் செய்கிறார். அதன் பின்னர் அந்த கார்டுகளை விற்பனை செய்கின்றனர்.
மேலும் இந்தப் பெண்களைப் பயன்படுத்தி எப்படி பொருட்களை பெருமளவில் அந்த இலங்கைத் தமிழர் வாங்கிக் குவித்துள்ளார் என்ற விவரமும் கிடைத்துள்ளது.
அந்தப் பெண்களின் கைப் பையில், ஸ்பை கேமராக்களை வைத்து விடுவாராம் இத்தமிழர். பின்னர் அவர்களை கடைகளுக்குள் அனுப்பி வைப்பார்.
அவர்கள் கடைக்குள் போனதும், என்னன்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதை செல்போன் மூலம் உத்தரவிடுவார். மேலும், கடைக்கு வெளியே தனது காரில் இருந்தபடி அந்த ஸ்பை கேமராவின் மூலம், கடையின் நிலவரத்தை இங்கிருந்தபடி கவனித்து அதற்கேற்ப உத்தரவிடுவாராம்.
மேலும், பில்லிங் கவுண்டருக்கு அந்தப் பெண்கள் போகும்போது, இளைஞர்களிடம் மட்டுமே கார்டைக் கொடுக்கச் சொல்வாராம். அப்போதுதான் அவர்கள் இளம் பெண்களின் அழகில் மயங்கி பெரிய அளவில் கார்டை நோண்டாமல் வாங்கிக் கொண்டு அனுப்பி வைப்பார்கள் என்பது இவரது கணிப்பு.












Click it and Unblock the Notifications