ஆம்புலன்ஸுடன் மோதிய பஸ்- 4 பேர் பரிதாப சாவு
மதுரை: மதுரை அருகே தனியார் பேருந்து, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர், சையது அபுதாகீர். இவருடைய மகள் வஜிதாபானு. ஒரு மாத குழந்தையான வஜிதாபானுவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சையது அபுதாகீர் தனது மகளை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு குழந்தைக்கு உடல் நிலை மோசமானது.
இதையடுத்து உடனடியாக மதுரை பெரிய மருத்துவமனையில், குழந்தையை சேர்க்க சையது அபுதாகீர் முடிவு செய்தார். அதன்படி அவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலை மதுரைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
வேனில் சையது அபுதாகீர், வஜீதாபானு, உறவினர் ஷகீலா (37), பரமக்குடி நர்சுகள் லதா (33), திருமுருகவள்ளி ஆகியோர் வந்தனர்.
முதுகுளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆம்புலன்ஸை ஓட்டினார். சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் வேன் வந்தபோது, பரமக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்துடன், ஆம்புலன்ஸ் மோதியது.
இதில், நர்ஸ் லதா, ஷகீலா, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சையது அபுதாகீர், திருமுருகவள்ளி, குழந்தை வஜிதாபானு ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் வஜிதாபானு வரும் வழியிலேயே இறந்தாள்.
விபத்து நடந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனப் போக்குவரத்து கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.