போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சேவுக்கு ரத்தினக் கம்பளம் கொடுப்பதா - நெடுமாறன், வைகோ கண்டனம்
சென்னை: போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பதால் இலங்கை முப்படைக் கூட்டுத் தலைவர் சரத் பொன்சேகாவை தனது நாட்டில் நுழைய அமெரிக்க அரசு தடைவிதித்துள்ளது.
ஆனால், அதேப் போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே எவ்வித தடையும் இல்லாமல் ரத்தின கம்பள வரவேற்பு பெற்று இந்தியாவுக்குள் நுழையவும், திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபடவும் வேண்டிய சகல ஏற்பாடுகளையும் இந்திய அரசு செய்துக் கொடுத்துள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இச்செய்தி தமிழர்களின் வேதனையை அதிகமாக்கியிருக்கிறது. வெந்தபுண்ணில் வேல் சொருகியது போன்ற இச்செயலுக்கு காரணமான இந்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
ராஜபக்சேவுக்கு பூரணகும்ப வரவேற்பு அளிப்பதா? - வைகோ
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, திருப்பதி கோவிலுக்கு வரும்போது, சகல ராஜமரியாதைகளோடு வரவேற்கப்படுகிறார் என்ற செய்தி தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுகிறது.
இந்த இனப்படுகொலை நடத்த ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அள்ளிக் கொடுத்து, மன்னிக்க முடியாத துரோகம் இழைத்த மத்திய அரசு, இப்போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், பூரண கும்ப வரவேற்பும் அளிக்க இருக்கிறது.
இது உலகத்தை திட்டமிட்டு ஏமாற்றுவதற்காக இலங்கை அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்தும் வஞ்சக நாடகமாகும். தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.