அகதிகளிடம் இரக்கம் காட்ட முடியாது-ஆஸி. பிரதமர்
கான்பெரா: புகலிடம் கோரி வருவோரிடம் அதீத மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.
சிறிய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் 78 தமிழ் அகதிகள். இவர்கள் யாரும் படகிலிருந்து இறங்க மறுத்து வருவதால், தற்போது இவர்களை தங்களது கடல் பகுதிக்குள் வைத்துப் பராமரித்து வரும் இந்தோனேசிய அரசு, அவர்களை நாடு கடத்தப் போவதாக மிரட்டி வருகிறது.
இதையடுத்து அகிதகள் அனைவரையும் கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து அதன் பேரில் ஆஸ்திரேலியாவில் அவர்களை குடியமர்த்தலாம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தக சங்கங்களின் கவுன்சில் ஆஸ்திரேலிய நாளிதழ்களில் விளம்பரம் மூலம் ரூடுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அகதிகள் விஷயத்தி்ல கூடுதல் மனிதாபிமான அக்கறையை ஆஸ்திரேலிய அரசு காட்ட வேண்டும் என்றும் அவை கோரியுள்ளன.
ஆனால் இதை நிராகரித்துள்ளார் கெவின் ரூட். இதுகுறித்து அவர் கூறுகையில், அகதிகள் விஷயத்தில் கூடுதல் இரக்கம் காட்டுவது இயலாத காரியம். இதில் அரசின் கொள்கையைப் புறக்கணித்து விட்டு செயல்பட முடியாது.
தற்போதைய கொள்கை என்னவென்றால் இந்த விஷயம் தொடர்பாக இந்தோனேசிய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதுதான். நாட்டின் நலனைக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அகதிகள் விஷயத்தை கையாளுவது மிகப் பெரிய பணியாகும். நாட்டின் நலனையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதேசமயம், அகதிகள் விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்டப் போவதில்லை. இரு நாடுகளும் மிகப் பொறுமையுடன் இதைக் கையாளுவோம். இப்போது பொறுமைதான் மிக மிக முக்கியம். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது, காலம் பிடிக்கும் என்றார்.