தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என தவறான தகவல்- மக்கள் பீதி

நேற்று மாலை, கடற்படை உளவுப் பிரிவு ஒரு தகவலை வெளியிட்டது. அதில், மும்பைத் தாக்குதலைப் போன்ற ஒன்றை மேற்கொள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் ஊடுறுவி, பின்னர் மும்பை, கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத் ஆகிய நான்கு நகரங்களில் ஒன்றில் தாக்குதல் நடைபெறலாம்.
இது மிகப் பெரிய அளவில் இருக்கும், மும்பைத் தாக்குதலை விடவும் பெரிதாக இருக்கும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த நான்கு நகரங்களிலும் பீதி ஏற்பட்டது. ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வழக்கம் போல பிளாஷ் செய்திகள் போட்டு மக்களை பீதிக்குள்ளாக்கின. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இருப்பினும் இதன் உண்மைத் தன்மை குறித்து ஐபி அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் இந்த எச்சரிக்கைக்கு ஆதாரம் இல்லை, தவறான தகவல் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து முப்படை உளவுப் பிரிவுகள், கடலோரக் காவல் படை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புப் படையினருக்கும் அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு அவசர அறிக்கையை அனுப்பினார்.
அதில் கிடைக்கும் உளவுத் தகவலை முழுமையாக பரிசோதித்து, அதில் உண்மை உள்ளதா, நம்பலாமா என்பதை நன்றாக அறிந்து கொண்ட பின்னரே பாதுகாப்புப் படையினரை உஷார்படுத்த வேண்டும். தேவையில்லாத பீதியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பின்னர் மேற்கண்ட நகரங்களில் ஏற்பட்ட பீதி அகன்றது. பாதுகாப்புப் படையினரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications