ரேஷன் கடைகளிலிலும் பருப்பு விலை உயர்வு!
சென்னை: கொள்முதல் விலை அதிகரித்ததால், ரேஷன் கடைகளில் உளுந்து மற்றும் துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது.
வெளிச் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு கிலோ ரூ.32க்கும், உளுத்தம் பருப்பு ரூ.36க்கும் வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் வெளிச்சந்தையில் இந்த பருப்புகளின் விலை குறையவில்லை.
மாறாக ரேஷன் கொள்முதல் செய்யும் இடங்களிலும் இந்த பருப்புகளின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. துவரம் பருப்பு கொள்முதல் விலை ஆரம்பத்தில் ரூ.40 முதல் ரூ.50 வரை இருந்தது. ஆனால் இப்போது ரூ.80 அளவுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
அதேபோல உளுத்தம் பருப்பும் ரூ.40 முதல் ரூ.45 வரை இருந்தது இப்போது ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ரேஷனிலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டுமே கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.8ம், உளுத்தம் பருப்பு கிலோவுக்கு ரூ.4ம் உயர்ந்துள்ளது.