பெங்களூர் ஸ்டேடியத்தில் வெடிகுண்டுடன் வந்ததாக பிடிபட்ட காஷ்மீர் கிரிக்கெட் வீரர் நிரபராதி
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெடிகுண்டுடன் வந்ததாக கூறி பிடிபட்ட ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் வீரர் பெர்வேஸ் ரசூல் மீது எந்தத் தவறும் இல்லை என்று தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணி பெங்களூர் வந்திருந்தது.
சின்னச்சாமி ஸ்டேடியத்தில் அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 18ம் தேதி ஸ்டேடியப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் மெட்டல் டிடெக்டர் கருவி ஒலிக்க ஆரம்பித்தது.
300 மீட்டர் சுற்றளவுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மோப்ப நாய் நேராக 105வது அறைக்குப் போய் நின்றது. அந்த அறையில் ரசூல் மற்றும் மீராஜூதீன் ஆகிய இரு வீரர்கள் தங்கியிருந்தனர்.
அந்த அறையில் இருந்த ரசூலின் பைக்கு அருகில் போய் நாய் நின்றது. இதையடுத்து அந்தப் பையை போலீஸார் சோதனையிட்டபோது அதில் ஆர்.டி.எக்ஸ் வைக்கப்பட்டிருந்ததற்கான தடயம் காணப்பட்டது.
இதையடுத்து ரசூல் மற்றும் மீராஜுதீன் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் அடுத்த நாள் ரசூல் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பையை அதிகாரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். இந்த சோதனையில் ஆர்.டி.எக்ஸ் வைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சோதனை முடிவு தெரிவிக்கிறது.
இதன் மூலம் ரசூல் மீது எந்தத் தவறும் இல்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.