பெரியாறு அணை: கேரளாவின் புதிய மனு-நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ரூர்க்கி ஐஐடி நிபுணர்களை வைத்து தான் நடத்திய ஆய்வறிக்கையை இணைத்து கேரள அரசு தாக்கல் செய்த புதிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ரூர்க்கி ஐஐடியைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு கேரள அரசு புதிய ஆய்வை நடத்தியது. அந்த அறிக்கையில், பூகம்பம் வந்தால் முல்லைப் பெரியாறு அணை தரைமட்டமாகி விடும். இதனால் பல லட்சம் உயிர்கள் பறிபோகும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை சேர்த்து புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்தது.
இன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசின் புதிய மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது கேரள அரசின் புதிய மனுவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்தே வாதிடுகையில், புதிய அணை கட்டுவதால் நில அதிர்ச்சி வந்தால் அது பாதிக்கப்படாது என்பதற்கான ஆதாரத்தை கேரள அரசு தாக்கல் செய்யவில்லை.
மேலும் நிலநடுக்கம் ஏற்படும் என கேரள அரசு கூறும் பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. எனவே இந்தப் புதிய மனுவை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து கேரள அரசு சார்பில் வழக்கறிஞரிடம், இனிமேல் தமிழகமும் சரி, கேரளாவும் சரி புதிய மனுக்களை இந்த வழக்கில் தாக்கல் செய்யக் கூடாது.
புதிய அணை கட்டினால் மட்டும் பூகம்பத்தைத் தவிர்க்க முடியும் என்று எப்படி நம்ப முடியும். இதை கேரளா தெளிவுபடுத்தவில்லை.
உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பின்னரும் அதை நிறைவேற்றாமல், உடனடியாக புதிய சட்டத்தை கேரள அரசு தாக்கல் செய்தது ஏன் என்று சரமாரியாக கேட்டனர்.
கேரள அரசின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதன் மூலம், தமிழக அரசின் வாதத்திற்குப் பெரும் வலு சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications