சேலம் சட்டக்கல்லூரி காலவரையின்றி மூடல்
சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.
சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.
வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை இருந்து வந்ததாகவும், மூத்த மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களிடம் மது வாங்கி வரச் சொல்லி மிரட்டி வந்ததாகவும் சில மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி:
இந் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது கல்லூரி மூடப்பட்டது.
கல்லூரியுடன் விடுதியும் மூடப்பட்டது. விடுதிகள் மூடப்பட்டதால், 140 மாணவர்கள் வெளியே அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை நிவாரணைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரிடம் அவர்கள் மனு கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
இதையடுத்து உடனே உதவித் தொகை வழங்கக் கோரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர்.
அவர்கள் கோட்டையை முற்றுகையிட்ட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோட்டை நுழைவு வாயிலில் மாணவர்களை தடுத்த போலீசார், அவர்களில் 6 பேரை மட்டும் கோட்டைக்கு சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர்.