இந்திய ராணுவ கல்லூரியை தகர்க்க சதி-யுஎஸ் தகவல்

ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்தியா மற்றும் டென்மார்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித் திட்டம் வெளியானது.
இருவர் மீதும் சிகாகோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் எப்பிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்,
பாக் தூதருக்கு நெருக்கமானவர்கள்:
ஹெட்லி, ரானா, சிகாகோவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்.
அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மேன் ஹெட்லி சிகாகோவை சேர்ந்தவர். பாகிஸ்தானில் பிறந்தவரான ரானா கனடா பிரஜை. சிகாகோவில் வசிக்கிறார். இருவரும் பள்ளியில் பயிலும் போதிலிருந்தே நண்பர்கள்.
இந்தியாவிலும் டென்மார்க்கிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவது பற்றி செப்டம்பர் 7ம் தேதி இருவரும் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்துள்ளோம்.
கார்ட்டூனால் டென்மார்க் மீது கோபம்:
இந்த பேச்சின் மூலம் இவர்களது சதித் திட்டமும் இதன் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரமாத அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முகம்மது நபியை கேலி செய்து கார்ட்டூன் வரைந்ததற்காக டென்மார்க்கில் உள்ள பத்திரிகை அலுவலகத்தையும் அதன் ஊழியர்களையும் தாக்கவும் இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.
அதே போல டெல்லியில் உள்ள தேசிய ராணுவ பயிற்சிக் கல்லூரியை தாக்கவும் இவர்களுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா உத்தரவிட்டுள்ளது.
மிஸ்டர் 'பி':
'பி' என்ற அடையாளம் தெரியாத ஒரு லஷ்கர்-ஏ-தொய்பா தலைவருடன் இருவரும் தொடர்பில் இருந்து வந்தனர்.
டேவிட் கோல்மன் ஹெட்லி கடந்த ஜூன் மாதம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பினார். இதனால் அவருக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பிருப்பது மேலும் உறுதியாகியுள்ளது என்று எப்பிஐ கூறியுள்ளது.
பாக் தூதரை காக்க அமெரிக்கா முயற்சி?:
ஹெட்லி, ரானாலுக்கு சிகாகோவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி நன்கு தெரிந்தவர் என்றாலும் அவருக்கு இந்த இருவரின் பயங்கரவாதத் தொடர்பு தெரியுமா இல்லையா என்பதைப் பற்றி எப்பிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் அந்த தூதரக அதிகாரியைக் காப்பாற்ற அமெரிக்கா முயல்வதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ரா, ஐபி குழு:
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இந்த இருவரையும் விசாரிக்க இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா', உள்நாட்டு உளவுப் பிரிவான 'ஐபி' ஆகியவற்றின் உயர் மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது.
அதே போல இவர்களை விசாரிக்க டென்மார்க் உளவுப் பிரிவினரும் அமெரிக்கா வந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications