For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நாளை அதிமுக உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நாளை அதிமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனம் டாஸ்மாக் நிறுவனம். அரசுக்கு இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் ஆகியோரின் வருமானமோ வாழ்க்கை நடத்துவதற்கே வழியில்லாத அளவிற்கு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், விற்பனை தொகை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குதல், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி 6 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ள நிலையில், அவர்களுடைய தொகுப்பு ஊதியத்தை மிகக்குறைந்த அளவுக்கு உயர்த்துவதில் எந்தவித நியாயமும் இல்லை. ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும்போது அந்த நிறுவனத்தின் லாபம், ஊழியர்களின் உழைப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணிய மர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 7-ந்தேதி, சனிக்கிழமை சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் சின்னசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சேகர் பாபு, எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் கலைராஜன், எம்.எல்.ஏ., சிவில் சப்ளைஸ் -டாஸ்மாக் மற்றும் அரசு சார்பு தன்னாட்சி நிறுவனங்கள் பிரிவு மாநிலச் செயலாளர் சூரியஆச்சாரி, வட சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜா மற்றும் தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கழக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்க, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முடித்து வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X