விளையாட்டுகளில் பங்கேற்க சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தடையில்லை
சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில், சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் கடந்த 2008 ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து பெற்றோர் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, சிபிஎஸ்சி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை தடுக்கக்கூடாது என உத்தரவிட்டார். இவ்விஷயத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தனது கொள்கை முடிவை தெரிவிக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.