எதியூரப்பா- ரெட்டி சகோதர்கள் இடையிலான பிரச்சினை தீர்ந்தது
டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கும், பெல்லாரி சகோதரர்கள் எனப்படும் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டிக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது. இவர்கள் இனிமேல் சகோதரர்களாக செயல்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் லடாயால் கர்நாடக பாஜக ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. எதியூரப்பாவை மாற்றியே ஆக வேண்டும் என ரெட்டி சகோதரர்கள் ஒற்றைக் காலில் நின்றதால் சுமூகத் தீர்வு காண முடியாமல் பாஜக மேலிடம் தவித்தது.
ஜனார்த்தன ரெட்டியும், கருணாகர ரெட்டியும், எதியூரப்பாவுக்கு எதிராக எம்.எல்.ஏக்களைத் திரட்ட ஆரம்பித்ததால் பாஜக ஆட்சி கவிழக் கூடிய ஆபத்துகளும் அதிகரித்தன.
இந்த நிலையில் இன்று டெல்லியில், எதியூரப்பாவை ஜனார்த்தன ரெட்டி சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்தவர் சுஷ்மா சுவராஜ். இந்த சந்திப்பின்போது இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டனவாம்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ். அப்போது அவர் கூறுகையில், பாஜகவில் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளோம்.
இனிமேல், எதியூரப்பாவும், ரெட்டி சகோதரர்களும் சகோதரர்களாக செயல்படுவார்கள், பாஜகவை வலுப்படுத்துவார்கள் என்றார்.
ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், கர்நாடகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நானும், கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்களும் (அதிருப்தி) முதல்வர் எதியூரப்பாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
எதியூரப்பாவும், ஜனார்த்தன ரெட்டியும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு புன்னகையுடன் போட்டோவுக்கு போஸும் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications