அந்தமானையும் கேட்கிறது இலங்கை - கச்சத்தீவை மீட்க தமிழகம் திரள வேண்டும்: ராமதாஸ்
சென்னை: அந்தமானையும் இந்தியாவிடம் இருந்து அபகரிக்க துணியும் இலங்கையின் மண்ணாசைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கச்சத்தீவை முதலில் மீட்க வேண்டும். இதற்கு தமிழகம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் தீவுகள், இலங்கையின் கடல் எல்லைப் பகுதிக்குள் வருகிறது என்றும், ஆகவே அந்தமான் தீவுகளும் இலங்கைக்கே சொந்தம் என்றும் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகல்லகாமா அறிவித்திருக்கிறார்.
அந்தமான் தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஆணையத்தில் முறையீடு செய்திருப்பதாகவும் இலங்கை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அந்தமான் தீவை மீட்பது குறித்து இந்திய அரசுடன் விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. வங்காள விரிகுடாவில் தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974ல் இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது. இந்திய அரசு இலங்கையுடன் தன்னிச்சையாக செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளை தமிழகம் தான் இன்று சந்தித்து வருகிறது. தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கைக்கு மிகத் தாராளமாக விட்டுக் கொடுத்ததன் காரணமாகவே இன்றைக்கு அந்தமான் தீவுகளும் எங்களுக்கே சொந்தம் என்று இலங்கை மார்தட்டுகிறது. இலங்கையில் சீனா கால் பதித்துள்ள நிலைமையும், இலங்கை அரசுக்கு முன் எப்போதும் இல்லாத துணிச்சலை கொடுத்திருக்கிறது.
போகிறபோக்கைப் பார்த்தால் ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு இப்போது, தங்களிடம் இருக்கிறது என்பதால் அவர் ஆண்ட பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இலங்கையின் இந்த மண் ஆசைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, கச்சத்தீவை மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.
இதற்கு தமிழகம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் நமது செயல்பாடுகள் நாட்டின் கட்டுக்கோப்பை குலைத்துவிடக்கூடாது என்பது முக்கியமானது தான். அதே நேரத்தில் நமது உரிமைகளுக்காகவும், நமக்கு சொந்தமான மண்ணை மீட்கவும் இந்திய அரசிடம் போர்க்குரல் எழுப்புவதில் தவறில்லை.
அண்ணா சேலம் உருக்காலை போன்ற பல பிரச்சினைகளுக்காக எழுச்சி நாள் கொண்டாடியது போல, இப்போது கச்சத்தீவை மீட்கவும், நதிநீர் பிரச்சினைகளில் நமது உரிமைகளை நிலை நிறுத்தவும் பழைய எழுச்சியோடு மீண்டும் செயல்பட அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.