மது கோடா மனைவி ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டி

ரூ. 4000 கோடி பண மோசடி, ஊழல், ஹவாலா வழக்குகளில் சிக்கியுள்ளார் மது கோடா. இந்த வழக்கில் ரெய்டு நடந்ததும் வயிற்று வலி வந்து மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார்.
நேற்றுதான் உடல் நலம் சரியாகி வீடு திரும்பினார். அவரை விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் அழைத்துள்ளனர்.
இந்த நிலையில், வருகிற சட்டசபைத் தேர்தலில், ஜார்க்கண்ட் நவநிர்மான் மோர்ச்சா சார்பில், மது கோடாவின் மனைவி கீதா கோடா போட்டியிடப் போகிறாராம்.
மது கோடாவின் ஆதரவாளர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சிதான் ஜார்க்கண்ட நவநிர்மான் மோர்ச்சா.
தனது கணவர் அப்பாவி என்று கூறி வரும் கீதா கோடா, ஜகன்னாத்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் கோடா வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஐந்து கட்டமாக சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 25ம் தேதி நடைபெறுகிறது. கடைசி கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 23ம் தேதி நடைபெறும்.
சிங்பும் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஜகன்னாத்பூர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் மது கோடா என்பது நினைவிருக்கலாம்.
கீதாவை தேர்தல் களத்தில் நிறுத்தும் முடிவை மது கோடா குடும்பத்தினர் சனிக்கிழமை எடுத்தனராம். அன்று சிங்பும் தொகுதியில் சுற்றுப்பயணத்தில் இறங்கினார் கீதா. தனது கணவருக்கு ஆதரவு திரட்டினார். மது கோடா அப்பாவி, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மக்களை சந்தித்துக் கூறினார்.
மேலும், தனது கணவர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு கோவில்களுக்கும் அவர் போய் வருகிறார். வெள்ளிக்கிழமை ரங்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் 11 ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்து வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000மாவது ஆண்டு ஜகன்னாத்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார் மது கோடா. 2005ம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications