தினகரனின் நிலம் மீட்பு போராட்டம்-கம்யூனிஸ்ட்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் (நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும்) நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் போராட்டம் தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் அரசு அவசர அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், சட்ட ரீதியாக முறையாகத்தான் செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி்ல் இணைந்த சங்கம்) பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தில் நீதிபதி பி.டி.தினகரன் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கும் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுபோன்ற காரியங்களில் அரசு சட்ட ரீதியாக முறையாகத்தான் செயல்பட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ள இடங்களை அரசு கைப்பற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தியது உண்டு.

அப்போதுகூட அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்து விடவில்லை. ஆனால், சிறுதாவூர் நிலம் பற்றி இப்போது அவசரம் காட்டாத அந்தக் கட்சியினர், அரசு நிலத்தை நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அதை மீட்க நில மீட்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் அரசு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று அறிவித்து விடவில்லை. இருந்தாலும், அதற்கான ஆவணங்களை எல்லாம் சோதனை செய்ய வேண்டியது இருக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக இதிலே அரசினால் எந்த முடிவும் எடுத்து விட முடியாது.

சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு ஒரு விதிமுறை. நீதிபதி தினகரனுக்கு ஒரு விதிமுறை என்று இதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகுபாடு பார்க்கக் கூடாது.

அதுபோலவே மேற்கு வங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்படக் கூடாது.

இந்தப் பிரச்சனை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அது குறித்து அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், சிறுதாவூர் பிரச்னையில் ஆண்டுக் கணக்கிலே காத்திருப்பவர்கள், இதற்கு மட்டும் தாங்களே நேரடி நடவடிக்கையில் இறங்கி அந்த நிலத்தை மீட்டு அங்குள்ள தலித் மக்களிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு சட்டம் ஒழுங்கைக் கெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென செயல்படுகிறார்கள்.

எனவே, அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்துக்கு தமிழக அரசும் காவல் துறையும் உள்ளாகி இருக்கின்றன.

ஆனால், ஏதோ போலீஸாரைக் கொண்டு வந்து குவித்து இருப்பதாகவும், மிரட்டல் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிக் கொண்டு தடையை மீறி போராட்டம் நடத்தினால் அரசு, சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும்.

அரசுக்கு உரிய நிலங்கள், உடைமைகளை மீட்பதில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு எதிரான மாறுபட்ட கொள்கை எனக்குக் கிடையாது.

அமைதியான முறையில் சட்டப்பூர்வமாக அவற்றை மக்களாட்சிக்கு உரியதாக்குவதே எனது கருத்தும் என்பதால் தேவையற்ற வன்முறைகளுக்கு வழிவகுக்காமல் அந்தக் கொள்கை நிறைவேற்றப்படவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+