மூலதாரா அணையைப் போல பெரியாறு அணையும் உடையும்- கூறுகிறார் அச்சு
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்குப் பின்னர் கட்டப்பட்ட பாலக்காடு மாவட்டம் மூலதாரா அணையில் அதிக அளவில் நீர் வந்ததால், அது உடைந்துள்ளது. எனவே அதற்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையிலும் அதிக அளவில் நீர் தேக்கப்பட்டால் அது உடையும், 40 லட்சம் மக்களி்ன் உயிர்கள் கேள்விக்குறியாகி விடும் என்று முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டுள்ளார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மூலதாரா அணைக்குப் போகும். ஆனால் அந்த அணையில் கடந்த சில வாரங்களாக பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக, அணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
ஆனால் இதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துடன் இழுத்துப் பிடித்து இணைத்துப் பேசியுள்ளார் அச்சுதானந்தன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
மூலதாரா அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அதைத் தாங்க முடியாமல் அணை உடைந்துள்ளது. இதை தமிழக அரசு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குப் பின்னர் கட்டப்பட்ட அணைதான் மூலதாரா அணை. ஆனால் அதுவே அதிக அளவிலான நீரைத் தாங்க முடியாமல் உடைந்துள்ள போது முல்லைப் பெரியாறு அணையின் கதி என்னாகுமோ என்று மக்கள் பெரும் கவலையும், அசசமும் அடைந்துள்ளனர்.
மூலதாரா அணையை விட முல்லைப் பெரியாறு அணை வயதானது. எனவே அந்த அணைப் பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 40 லட்சம் மக்களும் தற்போது பெரும் பீதியுடன் உள்ளனர்.
மூலதாரா அணை உடைந்தது தமிழக அரசின் கண்களைத் திறக்கும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை 152 அடி உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதன் நியாயத்தையும் தமிழக அரசு தற்போது புரிந்து கொள்ளும் என நம்புகிறேன். 136 அடி அளவை விட கூடுதலாக நீர் தேக்கினால் ஆபத்து என்று கேரளா கூறுவதையும் தமிழகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்.
1979ம் ஆண்டு முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டது. இதை தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் பூர்வமான கமிட்டிகளும் கூட புதிய அணை கட்ட பரிந்துரைத்துள்ளன.
புதிய அணை கட்டும் பணியை தொடர்ந்து கேரள அரசு மேற்கொள்ளும். அதை நிறுத்தும் எண்ணம் இல்லை. தமிழகததிற்கு நாங்கள் உரிய நீரைத் தருவதில் எந்தவித தயக்கமும் காட்ட மாட்டோம் என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications