திமுக என்னை காப்பாற்றும்- கோர்ட்டில் கையெழுத்திட்ட பின்னர் என்.கே.கே.பி. ராஜா பேச்சு
ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.
சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஈரோடு கோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட், துப்பாக்கியை ஒப்படைத்து விட வேண்டும். ராமநாதபுரம் கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று பெருந்துறை கோர்ட்டில் சரணடைந்தனர் ராஜாவும், 2வது மனைவி உமா மகேஸ்வரியும்.
அதன் பின்னர் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து இன்று ராமநாதபுரம் கோர்ட்டுக்கு ராஜாவும், 2வது மனைவி உமா மகேஸ்வரியும் வந்து கையெழுத்திட்டனர். இன்று முதல் ஒரு மாதத்திற்கு இருவரும் தினசரி ஆஜராகி கையெழுத்திடவுள்ளனர்.
கையெழுத்துப் போட்டு விட்டு வந்த ராஜா கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக என்னை கைவிடாது, எப்போதும் காப்பாற்றும் என்று கூறி விட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications