தீவிரவாத சதி: ஹெட்லியை விசாரிக்காமல் திரும்பும் ஐபி-ரா
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் நாடு கிளம்பி விட்டனர்.
லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் சேர்ந்து இந்தியாவில், மும்பைத் தாக்குதலைப் போன்ற பெரும் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டியதாக கூறி ஹெட்லியை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவருடன் ராணா என்ற பாகிஸ்தானில் பிறந்த கனடியரும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியாவிலிருந்து, ஐபி, ரா உளவு அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது. ஆனால் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நிர்வாக மற்றும் அதிகார வர்க்கத்து தாமதம், இழுத்தடிப்பு காரணமாக அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தியக் குழு நாடு புறப்பட்டு விட்டது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஹெட்லி மற்றும் கனடியரான தவார் உசேன் ராணாவுடன் இணைந்து, டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி, டேராடூனில் உள்ள டூன் ஸ்கூல், முசோரியில் உள்ள உட்ஸ்டாக் பள்ளி ஆகியவற்றைத் தாக்கி தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாக எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இவர்களை விசாரிக்கத்தான் வாஷிங்டன் சென்றிருந்தது இந்திய உளவுக் குழு. நவம்பர் 1ம் தேதி வாஷிங்டன் சென்ற இந்தியக் குழு ராணாவும், ஹெட்லியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிகாகோ நகருக்கு போகவே முடியவில்லை. வாஷிங்டனிலேயே அவர்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நவம்பர் 8ம் தேதி வாஷிங்டனிலிருந்து கிளம்பி நியூயார்க் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு பயணப்பட்டனர்.
இருப்பினும் மீண்டும் வாஷிங்டன் சென்று ஹெட்லியை விசாரிக்க இந்திய உளவுக் குழு முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.