குமரியில் பரவும் மர்ம காய்ச்சல்-சிறுவன் பலி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியானான். இது டெங்கு காய்ச்சல் என மக்கள் கூறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சமீபகாலமாக காய்ச்சல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா, எலி காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் நோய் தாக்குதலால் மாவட்டமே முடங்கிப் போயுள்ளது.
கடந்த சில மாதங்களாக பன்றி காய்ச்சல் பீதி மாவட்டங்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில் கட்டையான்விளை பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவரது மகன் ஜாஸ்பர். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னால் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான் ஜாஸ்பர். பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றான்.
சிகிச்சை பலன் அளிக்காததால் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காததால் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜாஸ்பர் இறந்தான்.
இந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் நகர்நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் தலைமையிலான குழுவினர் கட்டையான்விளை பகுதிக்கு சென்று காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலரின் ரத்த மாதிரிகளை எடு்த்து டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என கண்டறிய அனுப்பினர்.
மேலும் அந்த பகுதியில் புகை மருந்து, தெளிப்பான் மருந்து அடித்து சுகாதாரத்தை பேணினர். ஜாஸ்பர் வீட்டில் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.