ஏர் இந்தியா: நிரந்தரமாக்கப்படும் தற்காலிக ஊழியர்கள்
சென்னை: ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 5,548.26 கோடியை வரி செலுத்துவதற்கு முந்தைய நஷ்டமாக அடைந்துள்ளது.
ஆனாலும் அதன் தற்காலிக பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்விந்த ஜாதவ்.
500-க்கும் மேற்பட்ட இந்த தற்காலிகப் பணியாளர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என அரவிந்த் ஜாதவ் அறிவித்துள்ளதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.
ஏர் இந்தியாவின் கேட்டரிங் பிரிவு, சுமைகளைக் கையாளும் பிரிவு, விமான நிலையத்துக்குள் வாகன ஓட்டுபவர்கள் என பல பிரிவுகளில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வயது 42 முதல் 52க்குள் இருக்கும்.
இவர்களுக்கு ஆண்டுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான பணி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.190 மட்டும்தான் ஊதியம். பணி நிரந்தரமாகிவிடும் என இவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கப்பட்டதால், வேறு வேலைக்கும் போகாமல் இதிலேயே காத்திருக்கிறார்களாம்.
ஆனால், இப்போது விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க ஏர் இந்தியா முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்த தற்காலிகப் பணியாளர்களுக்குதான் முதல் பாதிப்பு என்பதால் எனவே இவர்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் பாட்டாளி யூனியனைச் சேர்ந்த சிலர் நேற்று அரவிந்த் ஜாதவைச் சந்தித்து தங்கள் பணி நிரந்தரக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அடுத்த இரண்டு மாதங்களில் சாதகமான பதிலைச் சொல்வதாக இந்தப் பணியாளர்களுக்கு உறுதி அளித்துள்ளாராம் அரவிந்த் ஜாதவ்.