இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கு எரிந்த பகுதியில் 'கருப்பு மழை'!- மக்கள் பீதி
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே சில தினங்களுக்கு முன்பு பெரும் தீவிபத்து ஏற்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான டிப்போ உள்ள பகுதியில் இன்று மழை நீர் கருப்பாக இருந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜெய்ப்பூர் அருகே சங்கேங்கர் என்ற இடத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரஷேன் டிப்போவில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று சங்கேங்கர் பகுதியில் மழை பெய்தபோது அது கருப்பு நிறமாக இருந்தது. மேலும், கருப்பு நிறத்திலான பசை போன்ற பொருள் மக்கள் மீது விழுந்தது.
வாகனங்களில் சென்றோர், நடந்து சென்றோர் மீது இந்த கருப்பு நிற பொருள் விழுந்து அப்பிக் கொண்டது. மேலும் வீட்டுக் கூரைகளின் மீதும் இந்த கரும்படலம் ஒட்டிக் கிடந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தீவிபத்தினால் ஏற்பட்ட புகை மண்டலம் வான்வெளியில் இருந்திருக்கும். இதனால் மழை பெய்தபோது அது கரும்படலமாக விழுந்துள்ளது.
மழை நீருடன் இந்த அழுக்கு தற்போது வந்திருக்கிறது. மழை ஓய்ந்து வெயில் அடித்தவுடன் இது மறைந்து போய் விடும் என்றனர்.
இதுகுறித்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், இதனால் எந்த ஆபத்தும் கிடையாது. கரும்படலம் விழுந்த உடைகள், வாகனங்களை நல்ல தண்ணீரை விட்டுக் கழுவினால் போதும், போய் விடும் என்றார்.