முல்லை அணை-மதுரையில் வைகோ உண்ணாவிரதம்
மேலமாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மதிமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.
மாலையில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என வைகோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'மலையாளியை அடித்தவன் சபரிமலை போக முடியுமா?':
நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்தவர், ஆறரை கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவிற்கு அதுவும் தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள திருப்பதிக்கு வந்துள்ளார். அவருக்கு ராஜமரியாதை பூர்ணகும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.
இதுவே ஒரு மலையாளியை அடித்தவன் அய்யப்பன் கோவிலுக்கு வந்திருந்தால் மரியாதை செய்வார்களா? இதை நேருக்கு நேராக பிரதமரிடம் கேட்க எனது தொகுதி மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் இந்த மன்றத்தில் கேட்கிறேன்.
நான் பிரபாகரனுடன் 27 நாட்கள் வன்னிகாட்டில் தங்கி இருந்தபோது அவர், தனி தமிழ் ஈழத்தை சர்வாதிகாரியாக ஆளமாட்டேன். ஒரு தம்பியே ஆள்வான், நான் முப்படை தளபதியாக செயல்படுவேன். பெரிய கடற்படை அமைத்து ராஜராஜசோழன், கரிகாலன் போன்ற மன்னர்கள் ஆண்டது போல் கடல் பகுதியில் தமிழ் ராஜ்யத்தை அமைப்பேன் என்று கூறினார்.
உலகில் எந்த போராளி இயக்கத்துக்கும் இல்லாத சிறப்பம்சம் விடுதலைப்புலி இயக்கத்துக்கு உண்டு. முப்படைகள் கொண்ட இயக்கம் பிரபாகரன் இயக்கம். விமானத்தை கண்டுபிடித்த சகோதரர்கள் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி இருப்பார்கள்.
முள்வேலிகளில் இருக்கும் தமிழர்களை தந்தை செல்வா கண்ட கனவுப்படி குடியமர்த்தவேண்டும். உலகில் தமிழ் இனத்திற்கு முகவரி கொடுத்தவர், பிரபாகரன்.
இலங்கை கடற்படையினருடன் சீன சிப்பாய்களும் சேர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.