கர்கரே புல்லட் புரூப் ஜாக்கெட் தரம்-விசாரிக்க முடிவு
டெல்லி: மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மிகவும் மோசமான தரத்தில் இருந்ததால்தான் அவரது உயிர் பறிபோனதாக கூறப்படுவது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, புல்லட் புரூப் உடையை அணிந்து கொண்டு சென்ற ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளின் குண்டுகளுக்குப் பலியானார். அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மிகவும் மோசமான தரத்தில் இருந்ததால்தான் அந்த உடையைத் தாண்டி குண்டுகள் பாய்ந்து அவரது உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது இந்த உடையையும் காணவில்லை என்று மும்பை போலீஸ் கூறி விட்டது. இதுவும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடையின் தரம் குறித்து நிலவும் சர்ச்சை குறிதது விரிவாக விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சவான் பேசுகையில், இந்த விவகாரத்தில் என்ன உண்மை உள்ளது என்பது குறித்து நான் கண்டறிவேன் என்றார் சவான்.