வழக்குப்பதிவில் மெத்தனம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கோவை: பெண் போலீஸ் காணாமல் போன வழக்கை பதிவு செய்யாமல் இழுத்தடித்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஜெயமணி. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, தமிழக துணை முதல்வர் வருகையை ஒட்டி, பாதுகாப்பு பணிக்காக, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை.
ஜெயமணியின் கணவர் மணியன், ஆகஸ்ட் 24ம் தேதி, காங்கேயம் மகளிர் எஸ்.ஐ. தனலட்சுமியிடம் புகார் கொடுத்தார். ஆனால், எஸ்.ஐ. தனலட்சுமி அந்த புகாரை வாங்க மறுத்தவிட்டார். காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பீட்டரிடம், மணியன் புகார் அளித்துள்ளார். அவரும் புகாரை வாங்க மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த மணியன், திருப்பூர் எஸ்.பி. சாந்தியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது.
பின்பு போலீஸ் விசாரணையில் பெண் காவலர் ஜெயமணி கொலையானது கண்டுபிடிக்கப்பட்டு, கொலையாளியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உரிய நேரத்தில் தன் புகாரை வாங்க மறுத்து அலைக்கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, ஜெயமணியின் கணவர் மணியன் புகார் மனு அளித்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய கோவை டி.ஐ.ஜி.பாலநாகதேவி, காங்கேயம் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பீட்டர், காங்கேயம் மகளிர் போலீஸ் எஸ்.ஐ. தனலட்சுமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.