மதுரையில் சிபெட் மையம், மேலூரில் பாலிடெக்னிக் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில், தென் மாவட்டங்களின் மீது அரசும், தொழில் நிறுவனங்களும் சமீபகாலமாக சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மதுரை உள்ளிட்ட நகரங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால், மதுரையில் மத்திய அரசின் உதவியோடு பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துணை மையம் அமைக்கப்படவுள்ளது.
ரூ.25 கோடியே 50 லட்சம் முதலீட்டில் அமையவிருக்கும் இம்மையத்திற்கான செலவில் 50 சதவீதமான ரூ.12.75 கோடியை தமிழக அரசு ஏற்றக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இடையப்பட்டி கிராமத்தில் 14.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கிடவும் தமிழக அரசு முன்வந்துள்ளது என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அத்துடன் மேலூர் சட்டசபைத் தொகுதியில் உள்ள அம்பலக்காரன்பட்டியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றை 2010-2011ம் கல்வியாண்டில் தொடங்குவதற்கும், கல்லூரிக்கு தேவைப்படும் கட்டடங்கள் 6 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசிய முதலீடும் வருகிறது...
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், அமைச்சர் அழகிரி இந்தோனேசியா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.
அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கான சலுகைகளை புரிந்துகொண்ட டெக்ஸ்மேக்கோ கம்பெனி, மதுரையில் மிக குறைந்த விலையிலான டிராக்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க முன்வந்தது.
டிராக்டர்கள் மட்டுமின்றி இரும்பு, விவசாய தளவாட உற்பத்தியும் இதில் அடங்கும்.
இப்புதிய தொழிற்சாலை மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.