காங்.குடன் மேலும் பல ஆண்டுகள் கூட்டணி நீடிக்கும் - கருணாநிதி
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் பிரமுகரும், இயக்குநர், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டுமென்றும் இந்த கூட்டணி நிலைத்தால்தான் இந்தியாவும், தமிழகமும் வளமாக இருக்க முடியும் என்று இங்கே பேசிய முக்தா சீனிவாசன் குறிப்பிட்டார்.
காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த அளவிற்கு ஒற்றுமை உள்ளது என்பது குறித்தெல்லாம் இங்கு விரிவாக நான் பேசுவதற்கு நேரம் போதாது. காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தால்தான் தமிழகத்திற்கு மேலும் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
சென்னை கடற்கரை கூட்டத்தில் ஒருமுறை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, என்னைப் பற்றியும், திமுக பற்றியும் எந்த அளவிற்கு புகழ்ந்து பேசினார் என்றெல்லாம் இங்கே எடுத்துக் கூறினார்கள். அந்த ஒற்றுமை இவ்விரு கட்சிகளிடையே மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணியும் நீடிக்கும் என்றார்.