கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை மறிப்போம்: வைகோ
மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமைக்காக டிசம்பர் 29-ந் தேதி கம்பம் பகுதி வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் மறிப்போம். தொடர்ந்து கேரளா அரசு இது போன்று ஈடுபட்டால் இந்த அறவழி மறியல் நிரந்தரம் ஆகி விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மதுரையில் வைகோ நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
மாலையில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரதத்தின்போது வைகோ பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று கேரள அரசு பொய் பிரசாரம் செய்து, அதன் அருகே புதிய அணையை கட்டி, நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. அதைத் தடுக்க அ.தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை இந்த அரசு காப்பாற்றத் தவறி விட்டது. இதனால் தான் புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது.
கேரள அரசு புதிய அணையை 10 கிலோ மீட்டர் தள்ளி கட்டட்டும். ஆனால் 100 மீட்டர் அருகில் கட்டுவதால் நமது பேபி அணைக்கு பாதிப்பு ஏற்பட்டு, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் ஏற்படும். இதனால் தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 604 கிராமங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும்.
நாங்கள் கேரள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களுக்கு கேடு விளைவிக்க நினைத்தால், உங்களுக்கு அரிசி, பருப்பு, பால், இறைச்சி போன்றவை தடைபடும் என்று எச்சரிக்கிறோம்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமைக்காக டிசம்பர் 5-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை, நான் 5 மாவட்டங்களில் உள்ள 604 கிராமங்களுக்கு வீதி, வீதியாக சென்று உண்மையை விளக்க உள்ளேன். மேலும் டிசம்பர் 29-ந் தேதி கம்பம் பகுதி வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் மறிப்போம். இந்த அறவழி மறியலை ம.தி.மு.க.ஏற்று நடத்தும். தொடர்ந்து கேரளா அரசு இது போன்று ஈடுபட்டால் இந்த அறவழி மறியல் நிரந்தரம் ஆகி விடும் என்றார் வைகோ.