பாஸ்போர்ட்-போலி ஆவணம் தயாரித்த கும்பல் கைது
காரைக்குடி: சிவகங்கையில் பாஸ்போர்ட்டுக்கு தேவையான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி காட்டுதலைவாசலைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). இவர் தனக்கு பாஸ்போர்ட் வேண்டி மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் போலி ஆவணங்கள் கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராஜசேகரன், மதுரை எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. மாறன், இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், எஸ்.ஐ. சண்முகம் ஆகியோர் கொண்ட தனிப்படை, பாலமுருகனிடம் விசாரணை நடத்தியது.
போலீசார் விசாரணையில், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள செல்வி டிராவல்ஸ் உரிமையாளர் சோலை (47), தேவகோட்டை மெட்ரோ ஸ்டுடியோ நல்லமுகம்மது (47), காரைக்குடி கீழ ஊரணி சுப்பிரமணி (37), அரியக்குடி கலியபெருமாள் (45) ஆகிய மூவரும் போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கியது தெரியவந்தது.
இவர்களுக்கு மதுரை, விருதுநகர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏஜன்ட்டுகள் இருப்பதும், இதன் மூலம் பலர் வெளிநாடு சென்றதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்த இரண்டு கம்ப்யூட்டர், பிரின்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பு இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில், பாலமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோலை அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டனர்.