பிரணாப்-ராஜபக்சே சந்திப்பு:அதிகாரப்பூர்வ செய்தி இல்லை

நேற்று முன்தினம் திடீரென இலங்கை கிளம்பிச் சென்றார் பிரணாப் முகர்ஜி. முதலில் லட்சுமண் கதிர்காமர் நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் அரசியல் ரீதியிலான வெற்றி நிச்சயம் பெறப்பட வேண்டும். அதுதான் நீடிக்கும் என்று கூறினார்.
பின்னர் நேற்று காலை அவர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். அதேபோல வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவையும் சந்தித்தார்.
இந்த இரு சந்திப்புகளிலும் இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. பிரணாப் முகர்ஜி இலங்கை வந்தது குறித்து ஒரு வார்த்தை கூட இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி இல்லை.
ராஜபக்சேவுடன் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரணாப் முகர்ஜி பேசியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் மட்டுமே வெளியானது. இதில் தமிழர் நலன், இடம் பெயர்ந்தோர் முகாம்களின் அபிவிருத்தி, மறுகுடியேற்றம் குறித்து எதையாவது பேசினார்களா என்றும் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல, ராஜபக்சே மற்றும் பொகல்லகாமா ஆகிய இருவரை மட்டுமே பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை.
கண்டிக்குச் சென்ற அவர் அங்குள்ள புத்தர் பல் வைக்கப்பட்டு்ள விகாரைக்குச் சென்று வழிபட்டார். பின்னர் நேற்று இரவு டெல்லி திரும்பி விட்டார்.
கிட்டத்தட்ட இது ஒரு ரகசியப் பயணம் போலவே காட்சி அளித்தது. எதற்காக இந்த பயணம், என்ன பேசப்பட்டது என்பது குறித்து இலங்கை அரசு மட்டுமல்லாமல், இந்திய அரசும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications